|
முகம்மது நபியை அவமதித்த தினமலர்
தமிழக மெங்கும் கண்டன எதிர்ப்பு குரல்கள்


இறைத்தூதர் முகமது நபி அவர்களைப் பற்றி டென்மார்க் பத்திரிக்கையில்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கார்டூன்களை வெளியிட்டடது. இதை பல
மேற்கத்திய நாடுகளின் பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும்,
தொலைக்காட்சிகளிலும் அந்த கார்டூன்கள் திரும்பத் திரும்ப மறுபிரசுரம்
செய்யப்பட்டன.

இஸ்லாம் உருவ வழிபாட்டையும் அதற்குக் காரணமாக இருக்கும் அநாவசிய
சித்திரங்கள் தீட்டுவதையும் தடுக்கிறது. இறைவனைத்தவிர மற்றவற்றை
வணங்குவதையும், மனிதர்களை கடவுளாக்குவதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஆகவே
வழிபாட்டிற்கோ அல்லது தூதர்கள் மற்றும் அன்னாரின் நேசர்களுக்கோ உருவம்
கொடுப்பதையும், அது மரியாதை நிமிர்த்தமாகவே இருந்தாலும், பிற்காலத்தில்
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான கடவுளுக்கு உருவம் இல்லை என்ற
நம்பிக்கையை சிதைத்துவிடும் என்பதால் சிலை வடிப்பதையும், சித்திரங்கள்
தீட்டுவதையும் இஸ்லாம் ஏற்கவில்லை.

இதனால் தங்களுடைய மத உணர்வை புண்படச் செய்து விட்டதால் உலகெங்கிலும்
வாழும் முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். தங்களின் எதிர்ப்புகளை
ஆரோக்கியமான முறையில் முஸ்லிம்கள் பதிவு செய்தனர். தமுமுகவும் சென்னை
உட்பட தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

இந்நிலையில் மீண்டும் தினமலர் நாளிதழின் வேலூர் பதிப்பில் இலவச
இணைப்பாக வெளிவருகிறது கம்ப்யூட்டர் இதழ். இணையதளம் ஒன்றில்
பிரசுரமாகியிருந்த முகமது நபிகள் குறித்த கார்ட்டூனை அந்த “தினமலர்
கம்ப்யூட்டர்’’ 02/09/08 நேற்று இதழில் பிரசுரித்திருந்தார்கள்.
தினமலரின் இந்த விஷமத்தால் ஒரு விஷயம் தெளிவாகிறது. இவ்வாறு வெளியிடுவது
சர்சையைக் கிளப்பக் கூடும் என்பது தெளிவாக தெரிந்திருந்தும் ,
விஷமத்தனமாக இதனை செய்துள்ளது தினமலர்.
காலை 10.30 மணியளவில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
வந்திருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வேலூர் தினமலர் அலுவலகத்தை
முற்றுகையிட்டனர். உடனே கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம், தண்ணீரை
பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றுடன் அதிரடிப்படையினரும்
போலீசாரும் அங்கு குவிக்கப் பட்டனர்.
முற்றுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி,
கலைந்து செல்லச் சொன்னார்கள். பதிலுக்கு முற்றுகையிட்ட முஸ்லிம்கள்
தினமலர் ஆசிரியரைக் கைது செய்தால் மட்டுமே இவ்விடத்தில் இருந்து
அகலுவதாய் கூறினர்.
முற்றுகையிட்டோர் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதில்
முஸ்லிம்கள் பலர் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். போலீசார் தடியடிப்
பிரயோகம் செய்ததில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள்
உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப் யாதவ்,
டி.ஐ.ஜி. சுந்தரமூர்த்தி, மேயர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ
இடத்துக்கு விரைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம்
அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்படவில்லை.
மாவட்ட ஆட்சியரும், உயர் போலீஸ் அதிகாரிகளும் தினமலர் அலுவலகத்துக்குள்
சென்று, நிர்வாகிகளிடம் பேசினர். நபிகள் நாயகம் பற்றி கேலிச்சித்திரம்
வெளியிட்டவரை கைது செய்தால்தான் கலைந்து செல்வோம் என கூட்டத்தினர்
உறுதியாக இருப்பது பற்றி தெரிவித்தனர். பிறகு, நபிகள் பற்றிய கார்ட்டூனை
கொடுத்தவர் இவர்தான் என்று திலிபன் என்கிற ஊழியரை தினமலர் நிர்வாகிகள்
போலீஸ் முன் நிறுத்தினர். அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்
சென்றனர். முஸ்லிம்கள் தரப்பில் 60 பேரைக் கைது செய்த போலீஸார் அன்று
இரவே விடுதலையும் செய்தனர்.
முற்றுகையிட்ட முஸ்லிம்களை கட்டுக்குள் கொண்டு வர வேலூர்
மாவட்டத் தலைவர் எஸ். தஸ்தகீர், மாவட்டச் செயலாளர் அஸ்லம் பாஷா,
மாவட்டப் பொருளாளர் ஏஜாஸ் அஹமது, ஊலமா அணிச் செயலாளார் சம்சுன் நாசர்
உமரி, மாவட்டத் துணைச் செயலாளர் ரஹ்மான் செரிப், நஜிர், முகம்மது அலி
ஆகியோர் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பெரும் பாடு பட்டனர்.
அதேப் போல திருவண்ணாமலை செங்கம், சேலம், ஆம்பூர், ஓசூர் என
பரவலாக நேற்று தினமலருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களையும், பல
இடங்களில் கடை அடைப்புகளையும் செய்து முஸ்லிம்கள் தங்களின் எதிர்ப்பினை
பதிவு செய்தனர்.
முஸ்லிம்களின் புனிதமான நோன்புக் காலமான ரமலான் மாதம் தொடங்கியுள்ள
நேரத்தில் தினமலர் இவ்வாறு நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம்
வெளியிட்ட சம்பவம் தமிழக முஸ்லிம் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை
ஏற்படுத்தி இருக்கிறது. இன்றும் பரவலாக தமிழகமெங்கும் பல இடங்களில்
கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
|