|
|
 |
08.06.2008
இன்றைய செய்திகள் |
அமெரிக்க
அதிபர் தேர்தல் வேட்பாளராகும் முயற்சியை கைவிடுவதாக அறிவித்தார் ஹிலாரி
கிளிண்டன்
அமெரிக்க அதிபர் தேர்தல் ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிடுவதற்காக
கிட்டதட்ட பதினேழு மாத காலமாக தான் செய்து வந்த பிரச்சாரத்தை முடித்து,
அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி ஆகும் தன்னுடைய முயற்சியை
கைவிடுவதாக ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.
வாஷிங்டனில் ஆற்றிய உரையில், ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் தேர்தல்
போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பர்ராக் ஒபாமாவை இவர்
ஆமோதித்துள்ளார்.
கம்யூனிஸ்ட்கள் பந்த்: இயல்பு வாழ்க்கை
பாதிப்பு இல்லை; 30 ஆயிரம் பேர் கைது
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வேலை
நிறுத்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சனிக்கிழமை ஈடுபட்டன.
மொத்தம் மாநிலம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் பேர் வரை கைது
செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் ஓடின.
வேலூர் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு
வேலூர், ஆம்பூர், ஆரணி பகுதிகளில் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில்
லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி,
வீதிக்கு வந்தனர்.
சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஓர்
இயந்திரம் இயங்குவது போன்ற சப்தம் சில விநாடிகள் ஏற்பட்டது. சில
வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. நிலநடுக்கம் எனக் கருதிய அப்பகுதி
மக்கள் வீதிக்கு ஓடிவந்தனர்.
செல்போன் மூலம் தகவல் பரிமாறிக் கொண்டபோது இதே போன்று வேலூரின் பல
பகுதிகளிலும் லேசான நில அதிர்வு நீடித்ததை அறியவந்தனர்.
ஆரணி, ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளிலும் இதே போன்ற நில அதிர்வு
காணப்பட்டதாக தகவல்கள் வந்தன. இருப்பினும், கட்டடங்கள் இடிந்ததாகவோ
அல்லது வேறு அசம்பாவிதங்கள் நடந்ததாகவோ தகவல்கள் இல்லை.
|
|